VIT University - நீங்க ஏன் சார் வேற புத்தகம் எதையும் பாக்கல?

உக்கிரமான வெயில், சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் என மூன்றுக்கு பெயர் பெற்றது "ராயவேலூர்"  எனப்படும் வெல்லூர்.

அண்மையில் "வெற்றி நிச்சயம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக "விஐடி பல்கலைக்கழகம்' சென்றிருந்தேன். சர்வதேச தரத்துடன் கூடிய கல்விக்கு மட்டுமல்லாது, பார்த்த மாத்திரத்திலேயே நமது புருவங்களை பட்டென உயர்த்த வைக்கும் பல்வேறு பிரம்மாண்டங்களை கொண்டது இந்த நிகர் நிலை பல்கலைக்கழகம்.

பயணத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே நான் "விஐடி பல்கலைக்கழகம்' சென்றடைந்து விட்டேன்.  பெருமை மிக்க இந்த பல்கலைக்கழகத்திற்கு நான் பல முறை சென்றிருந்தாலும், ஒரு முறை கூட இதனைச் சுற்றிப்பார்த்ததில்லை. அங்கு  நான் இது வரை பார்த்தது எல்லாம் நிகழ்ச்சி நடக்கும் "அண்ணா அரங்கம்", அதை விட்டால் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு "பீரங்கி". (இங்கு ஒரு "நினைவு மீட்புக் காட்சி" அதாகப்பட்டது "ஃபிளாஷ் பேக்" பார்க்க வேண்டியது கட்டாயம். அதாவது 2011-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்... அந்த பீரங்கிக்கு அருகில் நானும், லெஃப்டினெண்ட் கர்னல் திரு சங்கர் (இராணுவத்துறை பற்றி பேசும் சக வல்லுநர்) அவர்களும் சேர்ந்து நின்று ஒரு நிழற்படம் எடுத்துக்கொண்டோம்). அவ்வளவுதான்.

ஆனால் இந்த முறை எனக்கு கிடைத்திருக்கும் ஓர் அற்புத வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. இடையில் சிக்கிய அந்த ஒரு நாளில் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினேன்.

"360 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தை இந்த வெல்லூர் வெய்யிலில் எப்படி சுற்றிப்பார்ப்பது.. எதைப் பார்ப்பது...?" என்பதுதான் எனக்குள் அடுத்து உடனடியாக எழுந்த கேள்வி. 

அந்த நேரம் பார்த்து என்னைப் பார்ப்பதற்காக விஐடி பல்கலைக்கழக பேராசிரியரும் நண்பருமான திரு. முத்தானந்தம் (உணவு மற்றும் ஓட்டல் நிர்வாகத் துறை) அவர்கள் விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தார். வழக்கமான பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பிறகு இருவரும் அப்படியே பேசிக்கொண்டே விருந்தினர் மாளிகையில் உள்ள மதிய உணவுக் கூடத்திற்கு சென்றோம். 

அறுசுவை உணவு; அதை ருசித்து அளவாக உண்டதால் முழு மன நிறைவு. தொடர்ந்து, "பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும்" என்ற எனது விருப்பத்தை நான் திரு.முத்தானந்தம் அவர்களிடம் சொன்னேன். அவர், "இந்த லாஸ்ட் கேட்டிலிருந்து முன்னாடி இருக்கிற ஃபர்ஸ்ட் கேட் வரைக்கும்  அப்படியே உள்ளுக்குள்ளரையே நடந்து போனாக்க யூனிவர்சிடியே சுத்திப் பாத்த மாதிரி இருக்கும்..." என்று கூறி விட்டு, "லைப்ரரியே கண்டிப்பாக போய்ப்பாருங்க.... சர்ப்பிரைசிங்கா இருக்கும்", என்றார் ஒரு வித பெருமிதத்துடன். 

இவ்வாறு சொன்னதுடன் நில்லாமல், "வாங்க... நானும் என்னோட டிபார்ட்மெண்ட் வரைக்கும் உங்களோட வர்றேன்" என்று கூறியவாறே விருந்தினர் மாளிகையில் இருந்து பொடி நடையாக கிளம்பிய என்னுடன் சேர்ந்து அவரும் நடக்கத் தொடங்கினார். 

சுமார்  50.83 இலட்சம் சதுரடி நிலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை உள்ளடக்கிய VIT பல்கலைக்கழகத்தில் அவரது துறை வருவதற்கு முன்னதாக முனைவர் மு.வரதராசனாரின் மார்பளவு சிலை கம்பீரமாக நிற்கும் ஓர் இடத்திற்கு வந்தோம். மு.வ. அவர்களின் நூல்கள் சிலவற்றை நான் பள்ளிப் பருவத்திலேயே எனது தந்தையின் நூலகத்திலிருந்து எடுத்து படித்திருக்கின்றேன். 

(மு.வ. சிலைக்கு அருகில்) 
  
இதையடுத்து பல்கலைக்கழகத்தை தொடர்ந்து சுற்றிக் காட்டவும், நூலகத்திற்கு ஒரு விருந்தினராக அறிமுகப்படுத்தி அழைத்து செல்லவும் திரு.பாபு என்பவரை எனக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பேராசிரியர் முத்தானந்தம் என்னிடமிருந்து விடை பெற்று அவரது துறைக்கு சென்று விட்டார்.  அதுவரை இருவரும் விறுவிறுப்பாக பல்வேறு சங்கதிகளை பேசிக் கொண்டே வந்த காரணத்தாலோ என்னவோ, வெயிலின் உக்கிரம் எனக்கு பெரிதாக உரைக்கவில்லை. ஆனால் அவர் விடை பெற்று சென்று நான் சற்றே தனிமையான அந்த நொடியில், எனது தோல் செல்களை வெயில் பொசுக்கிக் கொண்டிருந்ததையும், எனது நெஞ்சை வியர்வை நனைக்கத் தொடங்கி இருந்ததையும் நான் உணர்ந்தேன்.

(பேராசிரியர் முத்தானந்தம் அவர்களுடன் ஒரு சுயப்படம்)
அப்போது மதியம் சுமார் 2.35 மணி இருக்கும். வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவ, மாணவியரின் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது.  பல்கலைக்கழக சாலையின் ஒருபுற ஓரமாக நடைமேடை (ப்ளாட்பார்ம்) செல்கின்றது. அதன் மேலே இழைம தாள் (ஃபைபர் ஷீட்) வேயப்பட்ட கூரை அமைந்துள்ளது. வெயில் நேரடியாக தாக்காத இதற்கடியில் திரு பாபு அவர்கள் என்னை வழி நடத்தி அழைத்து சென்றார். 

பின் நூலக கட்டடத்தை அடைத்து, அதன் உள்ளே நுழைவதற்கான சில விசேட நடைமுறைகளை நிறைவு செய்து நுழையும் போது எனது சட்டையின் நெஞ்சுப்பகுதி முழுவதும் வியர்வையால் நனைந்து போய் இருந்தது. ஆனால் திரு. பாபுவுக்கு சொந்த ஊரே  வெல்லூர் என்பதால், அவர் இந்த வெய்யிலை சட்டை செய்தவராகவே  தெரியவில்லை. 

சுமார் 25000 சதுரடி பரப்பளவில் நான்கு தளங்களாக கட்டப்பட்டு,  "தந்தை பெரியார் நூலகம்" என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த நூலகத்தில் நுழைந்தவுடன், பேராசிரியர் முத்தானந்தம் சொன்னதைப் போல, எனக்கு ஒரு பெரும் வியப்பு காத்துக் கொண்டுதான் இருந்தது. அங்கே, அந்த நூலக முகப்பு வாயிலிலேயே ஆளுயர திருக்குறள் புத்தகம் ஒன்று என்னை வரவேற்றது.


6 அடிக்கு 3 அடி (ஒரு பக்கம்) என்ற அளவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த திருக்குறள் புத்தகம்தான் "உலகின் மிகப்பெரிய திருக்குறள்"  என்று  அது கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் மரச் சட்டகத்தின் மேற்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. VGP உலக தமிழ் சங்கம் தயாரித்துள்ள இதனை, இந்த நூலகத்தில் வைப்பதற்காக அச்சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான  முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஜி.விஸ்வநாதன் அவர்களுக்கு  பரிசாக அளித்துள்ளார்.

அதன் அருகே நின்ற நான் பிரமித்துப் போனேன். அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். சில குறள்களை வாசித்தேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் மைய குளிர் சாதன வசதி (சென்ட்ரலி ஏர் கண்டிஷனிங் சிஸ்டம்) செய்யப்பட்ட அந்த நூலகத்தில் வந்து கொண்டிருந்த குளிர் காற்று வெயில் வியர்வையால் நனைத்து போயிருந்த எனது சட்டையை சற்றே ஆற்றியது. அதே நிலையில் நான் 'கிளிக்'-கிற்க்கும் உள்ளாகி கீழே உள்ள நிழற்படமானேன். 


இதையடுத்து நான் கிளம்பத் தயாரான போது, அந்த நூலகத்தின் பொறுப்பாளர் மற்றும் நூலகர், அந்த நூலகம் முழுவதும் அடுக்கப்பட்டுள்ள வேறு பல நூல்களையும் சென்று பார்க்கும்படியும் என்னிடம் அன்புடன் கூறினர். ஆனால் நான் பிறகு ஒரு முறை வந்து பார்க்கின்றேன் என்று கூறி விட்டு விடை பெற்றேன்.


நூலகத்தை விட்டு வெளியே வந்த பிறகு, திரு பாபு அவர்கள், "சார்... உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றார். நானும், "தாராளமாக கேளுங்கள் Mr.பாபு" என்றேன். "லைப்ரரி இன்சார்ஜ் உங்களை வேறு புத்தகங்களையும் போய்ப் பாருங்கன்னு சொன்னாரே... நீங்க ஏன் சார் வேற புத்தகம் எதையும் பாக்கல?" என்றார்.

"உலகிலேயே பெரிய புத்தகம் திருக்குறள். அதையே பெரிய சைஸ்லே பாத்தாச்சு. அப்புறம் எனக்கு வேற புத்தகம் எதையும் அங்கே  அப்போ பாக்கத் தோணலே Mr.பாபு... மனசு நிறைஞ்சிடுச்சு", என்றேன்.

அவர் "சூப்பர் சார்" என்று ஒரு துள்ளலுடன் கூறிய அதே நேரம், நாம் விருந்தினர் மாளிகையை மெல்ல அடைந்து விட்டிருந்தோம்.

VIT University என்று கற்றறிந்த உலகம் மிடுக்குடன் கூறும் "வெல்லூர் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி"-யை சுற்றி பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில், அடுத்த நாள் நிகழ்ச்சிகளும் உற்சாகமாக இருந்தன. எனது உரையையும் நான் சிறப்பாக செய்தேன்.
நன்றி.. வணக்கம்....





Comments

Unknown said…
நன்றாக உள்ளது நன்றி ஐயா