தீர்ப்பு - விமான விபத்தும் இல்லை; மரணமும் நிகழவில்லை (Judgment - No Aircrash No Death)

'தீர்ப்பு - விமான விபத்தும் இல்லை; மரணமும் நிகழவில்லை' (Judgment - No Aircrash No Death)
இது நான் கடந்த இரு தினங்களுக்கு முன் வாசித்த புத்தகம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து விட்டார் என்பது நாம் பொதுவாக அறிந்த சங்கதி. இருந்தாலும் இன்றளவும் அவரது மரணத்தில் ஏகப்பட்ட மர்மம் நிலவுகிறது. அவர் சாகவில்லை என்றும், அவர் எங்கோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கூட இன்றும் நம்பப்படுகிறது. அப்படியே இந்த புத்தகமும் கூறுகிறது.
இதன் ஆசிரியர் இராணுவ தளபதி மான்வதி ஆர்யா, சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் மரணமடையவில்லை என்று ஆதாரபூர்வமாக இதில் விளக்க முற்படுகிறார். இதற்காக நிறைய ஆவணங்களை, புத்தகங்களை, ஆய்வு ஏடுகளை ஆராய்ந்து கோவையாக எழுதி உள்ளார்.
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதியில் ஜப்பான் வானொலியில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அதாவது 'திரு.சுபாஷ் சந்திர போஸ் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் டோக்யோ சென்ற போது டைஹோகு விமானதளம் அருகே (தைவான் அருகே) அவரது விமானம் நொறுங்கி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் 18-ஆம் தேதியில் ஜப்பான் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருடன் சென்ற இராணுவ படை தளபதி துனமாசா ஷிடேய் சம்பவ இடத்திலேயே மாண்டார். மேலும் மற்றொரு தளபதி ஹபிபுர் ரஹிமான் உள்ளிட்ட நால்வருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன' என்று அந்த அறிவிப்பு துக்கம் தொனிக்க வாசிக்கப்பட்டது.
ஆனால் தைவான் அரசாங்கம் இதற்க்கு முரணாக ஒரு கருத்தைக் கூறியது. 1945, ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்றோ அதற்க்கு அண்மையிலோ அப்படி எந்த ஒரு விமான விபத்தும் தங்கள் நாட்டுக்கு அருகில் நடக்கவில்லை என்று கூறி அதற்கான சான்று ஆதாரங்களை வெளியிட்டது. மேலும் 1945, ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தைபே-யில் உள்ள தகன பதிவேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பெயரோ அல்லது அவருடன் அதே விமானத்தில் சென்று இறந்துபோனதாக சொல்லப்பட்ட இராணவ படை தளபதி உள்ளிட்ட மற்ற இரு விமானிகளின் பெயர்களோ இல்லை. இதுவும் சான்றுபூர்வமாக உள்ளதை இராணுவ தளபதி மான்வதி ஆர்யா இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் டோக்கியோவில் உள்ள ரன்கொஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள இறந்து போனதாக கூறப்படும் சுபாஷ் சந்திர போசின் சாம்பல் கூட அவரது இல்லை என்பதை அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது என்றும் இப்புத்தக ஆசிரியர் கூறுகிறார்.

இப்படி சுபாஷ் சந்திர போசின் விமான விபத்து, அவரது மரணம் பற்றிய எந்த ஒரு சங்கதியும், சான்று ஆதாரமும் ஒரு நேர்கோட்டில் இல்லாததை இதன் ஆசிரியர் இராணுவ தளபதி மான்வதி ஆர்யா படம் பிடித்து காட்டுகிறார். முடிவில் நேதாஜி விமான விபத்தில் மரணமடையவில்லை என்பதை தனது தீர்ப்புரையாக நிலை நிறுத்துகிறார்.

சட்டப் பார்வையின் மதிப்புரைக்கு அனுப்பப்பட்ட இந்த அருமையான ஆய்வு புத்தகத்தை பின்வரும் பதிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதன் விலை - ரூ. 250/-

LOTUS PRESS,
4263/3, Ansari Road, Darya Ganj,
New Delhi - 110002.
Ph. 32903912, 23280047

Comments