கிராம நிருவாக அலுவலர்களே சுதாரித்துக் கொள்ளுங்கள் !

"எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது மூத்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கத் தவறும் அந்த மூத்த அலுவலர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். "

இவ்வாறு பொது நல வழக்கு ஒன்றில் நமது மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. 

எனவே கிராம நிருவாக அலுவலர்களே விழிப்புடன் இருங்கள். எந்த கிராமத்தில் பதவியில் இருக்கிறீர்களோ அதே கிராமத்தில் வசிக்க, வாழ பழகுங்கள். "நான் நாமக்கல்லே எங்கவூட்டுலேதான் இருக்கேன். ஏதாவதுன்ன கூப்புடுங்க" என்று கொல்லிமலை கிராம நிருவாக அலுவலர் சொன்னால் அவருக்கு அஷ்டமத்து சனி பிடிக்கப் போகுதுன்னு அர்த்தம். அதுக்கு மேல் அவரை கண்காணிக்காமல் விட்ட வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எல்லோருக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்புபடி சிக்கல்தான்.

ஏன் இப்படி ஒரு கெடுபிடியான தீர்ப்பை மாண்பமை தலைமை  நீதியரசர் எம்.ஒய்.இக்பால் மற்றும் மாண்பமை நீதியரசர் டி.எஸ். சிவஞானம் அடங்கிய ஈராயம் (டிவிசன் பெஞ்ச்) பிறப்பிக்க வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி.

நாம் 'வி.ஏ.ஒ.' என்று ரத்தினச் சுருக்கமாக 'செல்லமாக' அழைக்கும் (வி.ஏ.ஒ.-க்கள் ஒரு கையெழுத்துக்காக அலையவிடும் போது இந்த 'செல்லம்' இருக்காது) இந்த அரசு அலுவலருக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா?

1 . கிராம வருவாய் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

2.  நில வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்க வேண்டும்.

3.  சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்பை கணக்கிடுதல் ஆகியவை தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும்.

4.  பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

5.  தீ விபத்து, வெள்ளம், புயல், இன்னும் இது போன்ற இயற்கை பேரழிவுகள் குறித்து மொத்த அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

6.  கொலை, தற்கொலை மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து காவல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது புலன் விசாரணைக்கு உதவி புரிய வேண்டும்.

7.  வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் கீழ் தங்கள் கிராம எல்லைக்குள் உள்ள சாலையோர மரங்களை கிராம நிருவாக அலுவலர்கள் பாதுகாத்து பேணி வளர்க்க வேண்டும். அம்மரங்களுக்கு சேதம் அல்லது இழப்பு  அதாவது அறுத்துக் கொண்டு போதல் (திருட்டு), விழுந்து விடுதல் ஆகியன ஏற்பட்டால் அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு.

8.  வருவாய் நிலை ஆணையின் விதி 18-பி -இன் படி ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் இருந்தாலோ, அது குறித்து அறிக்கை அனுப்பாமல் இருந்தாலோ அதற்கு கிராம நிருவாக அலுவலர்களே பொறுப்பு ஆவார்கள்.

இப்படி நிறைய பணிகள் கிராமத்தை சுற்றி வி.ஏ.ஒ-க்கு இருக்கின்றன. எனவே தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் என்று கே.எஸ்.விவேகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் மேற்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஆணை பிறப்பிக்கும் போது கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு (ஆரம்ப சுகாதார மையங்கள்) நியமனம் செய்யப்படும் மருத்துவர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விட்டு வைக்கவில்லை. நகரத்திலோ, மாவட்ட தலைநகரிலோ வசித்துக் கொண்டு தாங்கள் பணியாற்றும் கிராம மருத்துவமனைக்கு மாதத்தில் சில நாட்கள் மட்டும்  சென்று பணி செய்யும் பழக்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டிக்கும் தொனியில் தனது தீர்ப்பில் கூறியது. அவர்கள் கிராமத்தில் வசிப்பதில்லை என்றும் கூறியது. 

எனவே தாங்கள் பணியாற்றும் இடத்தில் வசிக்காத கிராம நிருவாக அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவது திண்ணம். சுதாரித்துக் கொள்ளுங்கள் வி.ஏ.ஒ. நண்பர்களே ! அவர்களது மேலதிகாரிகளே !! 
அத்துடன் கிராம அரசு மருத்துவர்களே !!!

Constitution of India, Article 226 - Public Interest Litigation - Tamil Nadu Ministeral Service Rules, Rule 38(b)(iii) - Every person appointed as Village Administrative Officer shall reside in village under his charge and shall continue to reside in said village so long as he continuous to hold post - Government's instruction in this regard to be strictly adhered to - VAOs have innumerable tasks to perform - Held, Writ Petition is disposed of with a direction to initiate action also against Senior Officials who fail to supervise them.

K.S.Vivekanandam v. The Chief Secretary, Government of Tamil Nadu - Madras High Court - M.Y.Eqbal, C.J. & T.S.Sivagnanam, J. - W.P. No. 7922 of 2011 - Decided on 16-6-2011.

Citation : 2011 (5) CTC 515

Comments

பணி செய்யும் ஊரில் இது போன்று ஊழியர்கள் வசிக்காததற்கு சில காரணங்கள்:
1 அந்த ஊரில் வாடகைக்கு சரியான வீடு கிடைக்காமை
2 சொந்த ஊரில் செய்து கொண்டிருக்கும் தொழில்.வணிகம். விவசாயம், முதலியவற்றை விதிகள் மறுக்காததாலோ, அல்லது மறுத்தாலும் கூட தொடர விரும்புவது
3 அந்த பணி செய்யும் ஊரில் தம் குழந்தைகளுக்கு கல்வி வசதி, மருத்துவமனை வசதி இல்லாதது.

அரசு வீட்டு வசதி செய்து கொடுத்து இதை கட்டாயமாக்கலாம்.
சொந்த விவசாயம், தொழிலை தொடர்வதை தண்டிக்கலாம்
அரசு பள்ளிகள். மருத்துவமனை, வட்டார அரசு, உள்துறை அரசு அலுவலகங்கள் இது போன்று வீடுகளுடன் அமைந்து கட்டாயம் ஆக்கப்பட்டால் இது மாநிலம் முழுவதும் வேலை செய்யத் துவங்கும். செய்யம் பணியின் தரம் சிறக்கும்
@ nerkuppai thumbi

முதற்கண் மீள் வருகைக்கு நன்றி.
அத்துடன் பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.
Unknown said…
பரம்பரை மணியகாரர்களை ஒழித்தபின் இந்தபதவிக்கே மரியாதை இல்லை! வெளிஊர்களில் தங்குவதால் சிலசமயம் யார் கிராம அதிகாரி என்பதே தெரிவதில்லை!
@ ரமேஷ் வெங்கடபதி

Thanks for comments...