இணையக் குற்றங்களை தடுக்க என்ன வழி ?


இணையத்தில் பல்வேறு குற்றங்கள் உலவுகின்றன. அவற்றை முப்பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். அவை, 1. மோசடி. 2. ஆபாசம் மற்றும் பாலியல் தொடர்பானவை. 3. அவதூறு. இப்பிரிவுகளின் கீழ் பல குற்றங்கள் உட்பிரிவுகளாக வருகின்றன.

ஒரு அரசு, குற்றங்களுக்கு கடும் தண்டனையைத் தருவதால், அதை கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. முதலில் குற்றம் புரியும் எண்ணத்தையே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதாவது குற்றம் புரிய திட்டமிடுபவனின் குற்றக் கருத்து, குற்றச் செயலாகிவிடாமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும். குற்றம் செய்யும் குற்றக் கருத்து நிறைவேறிவிடாமல் முட்டுக்கட்டைகளை இட வேண்டும். "கண்டுபிடித்து விடுவார்கள்....நிச்சயம் மாட்டிக் கொள்வோம்" என்ற அச்சுறுத்தல் மனதில் ஏற்பட வேண்டும். சுருங்கச் சொன்னால், இணையதளம் வழி குற்றங்களை செயவது அவ்வளவு எளிதல்ல என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி.?

ஒருவர் இணையதளம் வாயிலாக ஒரு செயலை ஆற்ற விரும்பினால் அதற்கு அவர் தனது சரியான விவரங்களை தர வேண்டும். அதற்கு மின்னஞ்சல் முகவரி அவசியம். அரசு இந்த ஆரம்பகட்டத்திலேயே கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆள் மற்றும் இருப்பிடம் குறித்த சரியான மற்றும் ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்ட விவரங்களை தந்தால் மட்டுமே மின்னஞ்சல் முகவரி பெற முடியும் என்ற நியாயமான கட்டுப்பாட்டை அரசு கொண்டு வர வேண்டும்.
இந்த நடைமுறையை புதிதாக இணையதளம் தொடங்குவதிலும் கொண்டு வர வேண்டும். இன்று புதிய இணையதளம் தொடங்குவதற்காக அதன் முகவரியை பதிவு செய்தல், அதற்கான அடிப்படை கருத்து வடிவத்தை (தீம்) வாங்குதல், வடிவமைக்கப்பட்ட தளத்தை உலக இணையத்தில் ஏற்றுதல் ஆகியவற்றுக்கு அயல்நாட்டு இணைய நிறுவனங்களை நாம் சார்ந்திருக்கிறோம். அங்கு இணையதளத்தை ஆரம்பிப்பவர் குறித்து எந்த விவரங்களையும் கேட்பதில்லை. எவ்வித சரிபார்த்தலும் கிடையாது. இதைத் தவிர்க்க, இணையதளம் தொடங்குவோருக்கு சட்டப்படியான சரிபார்ப்புடன், நமது அரசே வகை செய்யலாம்.

ஒரு பத்திரிக்கை அல்லது பருவ இதழை தொடங்க பத்திரிக்கை மற்றும் புத்தக பதிவு சட்டம், 1867-ல் உள்ள பல்வேறு வகைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும். அதை ஆரம்பிப்பவர் எண்ணற்ற சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உள்ளாக வேண்டும். சந்தாதாரர்களுக்கு அஞ்சல் வழி சுற்றுக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகச் சட்ட திட்டங்களின்படி அனுமதி பெற வேண்டும்.

அவ்வாறே திரைப்படங்களுக்கு திரைப்படவியல் சட்டத்தின்படி தணிக்கை வாரியத்தின் தணிக்கைக்கு உள்ளாக வேண்டும். இவையெல்லாம் பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் எல்லை மீறி சென்று விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட நியாயமான கட்டுப்பாட்டுச் சட்டங்களாகும்.
ஆனால் இணையதளம் வழி கருத்து, படம், காணொலி ஆகிய எவற்றையும் பதிவேற்ற எந்த கட்டுப்பாடும், ஆள் மற்றும் முகவரி அடையாள சரிபார்த்தலும் கிடையாது. இவை இணையக் குற்றங்கள் புரிவோருக்கு வசதியாக போய்விட்டன.

காரணம் போலி அடையாளத்தை (Fake Id) இணையத்தில் உருவாக்குவது மிக எளிதாக உள்ளது. இங்கிருந்து குற்றம் தொடங்கி விடுகிறது. இதைத் தடுத்தால் குற்றச் செயல் நடவாது தடைபடும் ! இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !!
- Jaya Rajan

Comments

Unknown said…
நலமாக இருக்கிறீர்களா... சார்!

கட்டற்ற சுதந்திரம் தான்..இணையத்தின் ஈர்ப்பு!
ஆபாசம் கூட தனிமனிதக் கேடு தான்!
அவதூறும், பொய்பரப்பலும்,சமுதாயக் கேடு!
இதில் சீன அரசாங்கம்,சிலபல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!
அட்வகேட் அய்யா அவர்களுக்கு, மதுரையில் தாங்கள் வெளியிட இருக்கும் தங்களது நூலினைப் பற்றி ஒரு முன்னோட்டமாக ஒரு பதிவினைத் தந்தால், எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டிட உதவியாக இருக்கும்.