புலனாய்வு நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே தகவல் தர மறுப்பதற்கான காரணம் ஆகாது - மைய தகவல் ஆணையம் மீண்டும் அதிரடி ஆணை !


புலனாய்வு/விசாரணை நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே, கேட்ட தகவலை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதற்குரிய போதுமான முகாந்திரம் ஆகாது; தகவலை வெளிப்படுத்தினால் அது புலன் விசாரணையை தடுக்கும் அல்லது முடக்கும் என்பதை மைய பொதுத் தகவல் அலுவலர் காண்பிக்க வேண்டும், என்று மைய தகவல் ஆணையம் அண்மையில் (16/9/2014) தனது ஆணை ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது. 

தகவல் மறுக்கப்பட்டதால் குறையுற்ற சௌபே என்பவர் தாக்கல் செய்த இரண்டாம் மேல்முறையீட்டை அனுமதித்து பிறப்பித்த ஆணையில், இந்நிலைப்பாடு குறித்து முன்னதாக தில்லி உயர் நீதிமன்றம் Bhagat Singh Vs. CIC & Anr [WP(C) 3114/2007, decision dated 03/12/2007] என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு நெறியை மைய தகவல் ஆணையம் சுட்டிக்காட்டியது. அத்தீர்ப்பின் 13-ஆம் பத்தியில் தில்லி உயர் நீதிமன்றம் பின்வருமாறு பொருள்விளக்கம் அளித்துள்ளது.

"13. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் தகவலை அணுகிப் பெறுதல் என்பது விதி என்றால், பிரிவு 8-இன் கீழான விலக்குகள், அதற்கான விதிவிலக்காகும். எனவே இந்த அடிப்படை உரிமை மீதான தடையாக இருக்கும் பிரிவு 8 கடுமையான முறையில் பொருள் கொள்ளப்பட வேண்டும். இந்த உரிமையையே மறைக்கும் முறையில் பொருள் விளக்கம் கொள்ளலாகாது. தகவலை வெளிப்படுத்துகையானது புலனாய்வு செயல்முறை அல்லது குற்றவாளிகளின் மீது குற்ற வழக்கு தொடர்கையை தடுக்கும் வகையில் இருந்தால்தான் பிரிவு 8-இன் கீழான விலக்கு வழங்கப்படும்.
ஒரு புலனாய்வு செயல்முறை நிலுவையில் உள்ளது என்பது மட்டுமே தகவலை வழங்க மறுப்பதற்கான ஓர் அடிப்படை ஆகாது என்பது வெளிப்படையானதாகும்; தகவலை வழங்காமல் நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கும் அதிகாரஅமைப்பானது, ஏன் அத்தகு தகவலின் வெளிப்படுத்துகை புலனாய்வு செயல்முறையை மேல்செல்ல விடாமல் முடக்கும் என்பதற்கு மனநிறைவளிக்கும் காரணங்களை காட்ட வேண்டும். அத்தகு காரணங்களும் தொடர்புடையதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் புலனாய்வு செயல்முறை முடக்கத்திற்குள்ளாகும் என்று பொது தகவல் அலுவலர் செய்த அபிப்பிராயமும் நியாயமானதாகவும், ஏதேனும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பரிசீலனை மட்டும் இல்லாது போனால், பிரிவு 8(1)(h) மற்றும் அத்தகு பிற வகைமுறைகளானவை தகவலுக்கான கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதற்கான ஓர் சொர்க்கமாகி விடும்."
Citation : File No. CIC/BS/A/2013/002090/5999 - Mr. Y.N.Chaubey Vs. CPIO & Under Secretary - Date of Decision : 16-09-2014 - Central Information Commission - Basant Seth, Information Commissioner.

Comments

neutron said…
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து உங்களின் கருத்தினை எதிர்பார்க்கின்றேன். இது குறித்து என்னுடைய பதிவான
www.aniyayangal.blogspot.com படித்துப்பார்த்து தங்களின் கருத்தினை தெரிவிக்கவும்.

நன்றி
பாலாஜி
Thanks for the swift feed back sir..