தகவல் கோரும் மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றியனுப்பு அல்லது அத்துறைடமிருந்து தகவலை சேகரித்து கொடு - மைய தகவல் ஆணையம்.

 தகவல் கேட்டு த.அ.உ. சட்டம் பிரிவு 6(1) -இன்படி மனு செய்தால் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தர வேண்டும். அல்லது அத்தகவல் எந்த பொது அதிகார அமைப்பிடம் உள்ளதோ அதன் பொதுத் தகவல் அலுவலருக்கு மனுவை பிரிவு 6(3)-இன் கீழ் மாற்றி அனுப்புதல் வேண்டும். மேலும் அது குறித்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு மனு பெற்ற தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு மிகுதல் ஆகாது.

அண்மைக்காலமாக தகவல் கோரும் மனுக்களை பொதுத் தகவல் அலுவலர்கள் இந்தப் பிரிவுகளை பயன்படுத்தி பந்தாடிக் கொண்டு வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. "தாங்கள் கோரும் தகவல் அங்கு உள்ளது, இங்கு உள்ளது" என்று மனுவை மாற்றி அனுப்புதல், மாற்றிப் பெற்ற பொ.த.அலுவலர் அம்மனுவின் மீது காலதாமதமாக நடவடிக்கை எடுத்தல், அல்லது பதில் தெரிவிக்காமை, மனுதாரரை அலைக்கழிக்க வைத்தல், இப்படி இச்சட்டத்தின் வலிமை நீர்த்துப் போகுமளவிற்கு செயல்பாடுகள் தொடர்கின்றன.

இந்நிலைப்பாட்டை மைய தகவல் ஆணையத்தின் அண்மைக்கால ஆணை ஒன்று களைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஆணையின் பொருள் விளக்கப்படி,

(1) மனுவைப் பெறும் பொதுத் தகவல் அலுவலர் ஒன்று தகவல் கொடுக்க வேண்டும் அல்லது அத்தகவலை வைத்துள்ள அலுவலருக்கு அல்லது துறைக்கு மனுவை பிரிவு 6(3)-இன்படி (காலவரம்பிற்குள்) மாற்றி அனுப்புதல் வேண்டும்.

(2) அப்படி பிரிவு 6(3)-இன் கீழ் மாற்றி அனுப்பவில்லை என்றால், எந்த பொதுத் தகவல் அலுவலரிடம் அல்லது துறையிடம் அத்தகவல் உள்ளதோ அவரிடமிருந்து அதை சேகரித்துப் பெற்று மனுதாரருக்கு அனுப்புதல் வேண்டும்.

அருமையான ஆணை. 

File No. CIC/AD/A/2013/001265­SA - Date of Decison : 18­-06­-2014.

Comments