புத்தகக் கண்காட்சி - ஓர் உற்சவம்

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சென்னை வாழ் மக்கள் இரண்டு கடல்களின் முன் மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர் என்றால் அது மிகையல்ல. அதுவும் அவர்களும் கடல் போன்று திரண்டு.

அந்த இரண்டு இடங்கள் - ஒன்று மெரினா கடற்கரை... மற்றொன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி. 



கூட்டமோ... கூட்டம்...! அது வெறும் பார்வையாளர்களின் கூட்டம் மட்டுமல்ல.  எத்தனை ஊடகங்கள் வந்தாலும் புத்தகங்களின் தனியிடத்தை தகர்க்க முடியாது என்பதை காட்ட வந்த கூட்டம். வந்தவர்களில் யாரும் வெறும் கையோடு வெளி வரவில்லை. எல்லோர் கைகளிலும் குறைந்த பட்சம் இரண்டு புத்தகங்களை காண முடிந்தது. நல்ல புத்தகங்களை வாங்கிய அல்லது வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது.


சுமார் 600 கடைகள். பார்வையிட வசதியாக 14 நடைபாதைகள். அப்படியே பார்வையிட்டு நடந்து வந்தால் சுமார் 5 மணிநேரம் ஆகின்றது. கண்காட்சி என்பதால் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் மனமுவந்து புத்தக விலையில் 10 சதம் முதல் 30 சதம் வரை தள்ளுபடி கொடுத்தது வரவேற்பிற்குரியது. புதிய புத்தகங்கள், மறு பதிப்புகள், திருத்திய பதிப்புகள், துறை வாரியான புத்தகங்கள் (ஆனால் சட்டத் துறை புத்தகங்கள் பெரிதாக தென்படவில்லை) என எல்லாம் இருந்தன. கல்கி, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற என்றும் மனதில் நிற்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களை எல்லாக் கடைகளிலும் காண முடிந்தது.



கையில் ரொக்கம் இல்லையென்றால் கடன் அட்டை வாயிலாக பணம் செலுத்தும் வசதி கடைகள் நெடுகிலும் பொதுவாக ஏற்பாடு செய்யபட்டிருந்தன. உள்ளே சிற்றுண்டிக் கூடம் ஏதுமில்லை. எனினும் காபி, பழச் சாறு கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

காட்சிக் கட்டணம் ரூ.5/- மட்டுமே. கூட்டம்  அதிகம் என்பதால் வரிசையும் நீண்டு இருந்தது.

உள்ளே புத்தகங்களை பார்வையிட்டு ஒரு சந்தோசக் களைப்புடன் வெளியே  வந்தால், கண்காட்சிக்கு எதிரே 'சாப்பிடலாம் வாங்க' என்று பதாகை கொண்ட சிற்றுண்டி உணவகம் அழைக்கின்றது.

பல்வேறு இடங்களில் இருந்த புத்தகங்கள் அனைத்தும் கண்காட்சியில் ஒன்று சேர அணி வகுத்து நின்றது ஓர் உற்சவம்தான்.

Comments

Anonymous said…
ஆமாம் , நீங்கள் சொல்வது போல் இது ஓர் உற்சாக உற்சவமே !
விருந்தான விழாவே !
தங்கள் கருத்துரைக்கு மறுப்புரை ஏது ...?
. எத்தனை ஊடகங்கள் வந்தாலும் புத்தகங்களின் தனியிடத்தை தகர்க்க முடியாது என்பதை காட்ட வந்த கூட்டம்.

உற்சாக உற்சவம் பற்றிய உற்சாகப்ப்கிர்வுக்குப்பாராட்டுக்கள்..
@ இராஜராஜேஸ்வரி said...

//உற்சாக உற்சவம் பற்றிய உற்சாகப் ப்கிர்வுக்குப்பாராட்டுக்கள்..//

வருகைக்கு நன்றி...
Unknown said…
அடுத்த புத்தகக் கண்காட்சி திருப்பூர்ல நடக்க இருக்கிறது..இங்கேயும் அனைவரும் வந்து சிறப்பிக்கணும் !
சென்னைவாசிகளுக்குக் கிடைக்கும் சுகங்களில் இதுவும் ஒன்று.

வரமுடியலை என்ற ஆதங்கத்தில் புத்தகத்திருவிழா இடுகைகளைமட்டும் விடாமல் படித்துவிடுகிறேன்.

நீங்க என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று சொல்லலையே?
@ரமேஷ் வெங்கடபதி said...

//அடுத்த புத்தகக் கண்காட்சி திருப்பூர்ல நடக்க இருக்கிறது..இங்கேயும் அனைவரும் வந்து சிறப்பிக்கணும் !//

உங்கள் வருகைக்கு நன்றி சார்..
எங்களுக்கு வேண்டியப்பட்ட ஊரிலே போட்ட நிச்சயம் வரவேண்டியதுதான்....
@ துளசி கோபால் said...

//சென்னைவாசிகளுக்குக் கிடைக்கும் சுகங்களில் இதுவும் ஒன்று.வரமுடியலை என்ற ஆதங்கத்தில் புத்தகத்திருவிழா இடுகைகளைமட்டும் விடாமல் படித்துவிடுகிறேன்.நீங்க என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று சொல்லலையே?//

முதலில் உங்க வருகைக்கு நன்றி மேடம்..

என்னோட பொண்ணுக்கு கல்கியின் 'பொன்னியின் செல்வன்', ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' போன்ற நாவல்கள். இந்தப் புத்தகமெல்லாம் என்னிடம் ஏற்கனவே இருந்து படித்து கிழிந்து பழசாகி விட்டதாலும், புதிதாக வேண்டும் என்று கேட்டதாலும், மீண்டும் வாங்கப்பட்டன.

மகனுக்கு சில ஆங்கில கதைப் புத்தகங்கள்.

எனக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய 'ஆனந்த அலைகள்' (ஆசைப்படு, அடைந்து விடு ). (தமிழில் சுபா)