வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள் !

எங்கள் சேலம் மாநகரிலே ஆடிப் பண்டிகை வெகு சிறப்பாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. அதே போன்று எங்கள் சேலம் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் பண்டிகையும் வந்து விட்டது. தேர்தலில் நிற்கும் வழக்குரைஞர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு வழக்குரைஞர் அலுவலகத்திற்கும் சென்று ஓட்டு கேட்பது, என்னை தேர்ந்தெடுத்தால் நான் இன்னது செய்வேன், இன்னதை நடக்க விடாமல் தடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அமர்களப்படுத்தினர். மாலையில் தேர்தல் வியூகம் வகுத்தல், திட்டமிடுதல் என உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

முடிவில் கடந்த வாரம் தேர்தல் தினமும் வந்தது. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வழக்குரைஞர்கள் வரிசையாக நின்று ஓட்டு போட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் தலைவராக வழக்குரைஞரும் எனது நல்ல நண்பருமான திரு ஜி. பொன்னுசாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பெரு மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 

அடுத்ததாக செயலாளர் பதவிக்கு வழக்குரைஞர் திரு விவேகானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட மிக அதிக ஓட்டுகளை இவர் பெற்று இருந்தார். காரணம் சென்ற கால கட்டத்திலும் இவரே செயலாளர் பதவியில் இருந்தார். அப்போது வழக்குரைஞர்கள் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வந்தது. அச்சமயத்தில் இவர் அதை நல்ல முறையில் முன்னெடுத்து அரவணைத்து சென்றார். மேலும் சட்டத்தின் ஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்களை சங்கத்திற்கு அழைத்து வந்து அத்துறை பற்றி விரிவுரை ஆற்ற செய்தார். மூத்த வழக்குரைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் பணியை பாங்குடன் செய்தார். வழக்குரைஞர்களுக்கான கூட்டு (விபத்து) காப்பீட்டு திட்டம், வருமான வரி அட்டைக்கு (பான் கார்டு) ஏற்பாடு செய்தார், சேலம் வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு என ஒரு வலைத்தளம் உருவாக்க ஆலோசனை சொல்லி அதை நிறைவேற்றினார் - இப்படி பல்வேறு நலப்பணிகளை செய்து நல்ல பெயர் ஈட்டுக் கொண்டார். அதுவே இவர் இந்த முறையும் வெற்றி பெற வழி வகுத்தது என்றால் அதில் மிகை ஒன்றும் இல்லை. வெற்றிச் செய்திக்குப் பிறகு இவரை "சட்டப் பார்வை"  வலைப்பதிவு  சார்பாக தொடர்பு கொண்டு பேட்டி எடுத்த போது, இவர் சொன்னது "விட்டுப் போன பணிகளை தொடர்ந்து நிறைவேற்றவே நான் மீண்டும் போட்டியிட்டேன். தற்போது வெற்றியும் பெற்றுள்ளேன். எனவே அப்பணிகளை நிறைவேற்ற முனைந்து பாடுபடுவேன்.. குறிப்பாக சேலம் வழக்குரைஞர்களுக்கு தனியறை (சேம்பர்) கட்டித் தருவதற்க்கான ஏற்பாடுகளுக்கு ஆவன செய்வேன்" என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வழக்குரைஞர் திரு சுந்தரேஸ்வரன் அமோக வெற்றி பெற்றார். தேர்தலில் ஜெயிக்க கடினமாக உழைத்தார். இவர் முன்பு எங்கள் சங்கத்தில் நூலகர் பதவியில் இருந்தார்.

துணைத்தலைவர் பதவிக்கு வழக்குரைஞர் திரு எஸ்.டி. மணிவாசகம், துணை செயலாளர் பதிவிக்கு வழக்குரைஞர் திரு ஸ்ரீதர் ஆகியோர் தேர்வானார்கள். நிருவாகக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எங்கள் அலுவலக இளம் வழக்குரைஞர் திரு சிங்காரவேலு அமோக வெற்றி பெற்றார்.

பெற்ற பதவியைக் கொண்டு உற்ற நற் பணிகளை ஆற்ற என் நல் வாழ்த்துகளை வெற்றி பெற்றோர் அனைவருக்கும் தெரிவித்தேன் !

சேலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு ஜி. பொன்னுசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் !

செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு விவேகாநந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள் !

பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
நண்பர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள் !

Comments

பெற்ற பதவியைக் கொண்டு உற்ற நற் பணிகளை ஆற்ற என் நல் வாழ்த்துகளை வெற்றி பெற்றோர் அனைவருக்கும் தெரிவித்தேன் !//

நானும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் இணைந்து வாழ்த்துகளை தெரிவித்த அமைதி அப்பாவிற்கு எனது நெஞ்சு நிறை நன்றிகள் பல.
இந்தப் பதிவு யாரையும் தூக்கி வைத்து எழுத வேண்டும், மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட ஒன்றல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் சங்க நிருவகிகளாக இருந்தவர்களும் பல்வேறு நற்பணிகளை சிரமேற்றுக் கொண்டு ஆற்றி உள்ளார்கள். அப்போது இந்த வலைப்பதிவு தொடங்கப்படவில்லை. இது அப்போது இருந்திருந்தால் அவர்கள் நற்பணிகளையும் நினைவு கூர்ந்து அச்சமயத்தில் எழுதி இருப்பேன். எனக்கு எந்த விளம்பரமும் அவசியமில்லை. நான் யாரையும் விளம்பரப்படுத்தினால்தான் அவர்கள் தெரிய வருவார்கள் என்ற நிலையும் யாருக்கும் இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவான நண்பன். எனக்கு எல்லோரும் வேண்டும்.