வரம் வேண்டும் வழக்குரைஞர் !

கஷ்டம் வருகிற போதுதான் கடவுளின் ஞாபகம் வரும் என்று வேதனை கலந்த வேடிக்கையுடன் சொல்வதுண்டு. அதற்காக கோவில் சென்று கடவுளிடம் நமது கஷ்டங்களை அப்பீல் செய்து, இனி 'எல்லாம் அவன் செயல்' என்று 'அவனிடம்' விட்டுவிடுகிறோம். எல்லோரையும் ஏதோ ஒரு கஷ்டம், துன்பம் மனதை வாட்டிக் கொண்டேதான் இருக்கிறது. 'அப்பாடா ... பிரச்சனை முடிந்தது' என்றும் 'இனி நன்றாக வாழலாம்' என்றும் நிம்மதி பெருமூச்சு விட நேரம் இருக்காது..... அதற்குள் இன்னொரு பிரச்சனை எழுந்து விடும்.

அறிஞன் ஒருவன் சொன்னான், "யாருக்கு நிறைய பிரச்சனை இருக்கிறதோ, அவன் உள்ளபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்" என்று. இது உண்மைதான். எனவே வாழ்ந்து கொண்டிருக்கிறவன் வாழ்வில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதை லாவகமாக சமாளித்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நாமாக பிரச்சனையை வலிய தேடிக் கொள்ளக் கூடாது.

பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் எது என்று கேட்டல், "சரியாக புரிந்து கொள்ளாமை" அல்லது "தவறாக புரிந்து கொள்ளல்" என்று சொல்லலாம். இது எப்படி என்று கேட்டல், நமது வாழ்வின் நிகழ்வுகளை, தொடர்புகளை, போக்குகளை "அரைகுறையாக புரிந்து கொள்ளல்" . எனவே எதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் முன் ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அது நிச்சயம் நம்மை பிரச்சனையில் கொண்டு சென்று விட்டு விடும். அதுவே நம்மை சார்ந்த, நம்மை நேசித்த, நம்மை நம்பிய, நமக்கு உதவிய மற்றொருவருக்கும் பிரச்சனையாக முடிந்து விடக் கூடும். சில சமயம் நாம் சரியாகப் புரிந்து கொண்டிருந்தும் நம்முடன் தொடர்பு கொண்டவர் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர்   நமக்கு எதிராக தவறாக முடிவு எடுத்து விடும் அபாயமும் ஏற்பட்டு விடுவதுண்டு.

அதற்காகத்தான் சிந்தனை, ஆராய்ச்சி என்ற இரு கருவிகள் நமக்கு உற்ற துணையாக உள்ளன. அதன் முடிவு நல்ல முடிவாக அமைய ஆண்டவனின் அருளும் வேண்டும். அந்த அருளைப் பெற, கஷ்டம் வருவதற்கு முன்பாகவே அவருக்கு "சல்யுட்" அடித்து விடுவது நல்லது. அப்படி அடித்து பாருங்கள்.... ! வரவிருக்கும் கஷ்டம் கூட வழியிலேயே காணமல் போய் விடும்.

இங்கு நான் கூறும் கடவுள் அவரவர்  மதத்தின்படி வணக்கும் கடவுள். வேறு வகையில் சொன்னால் நமக்கும் மேலே ஒரு சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் நம்பினால், அதுவே கடவுள்.

அண்மையில் நானும் எனது நண்பர் வழக்குரைஞர் திரு இரா.  மோகனமுரளி அவர்களும் ஒரு ரம்யமான காலைப் பொழுதில் சேலத்தில் சீலநாய்க்கன்பட்டி புறவழி சாலைக்கு அருகே ஒரு குன்று மீது அழகாக நின்று அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு பாலமுருகன் கோவிலுக்கு சென்றோம். கூட்டம் அதிகமில்லை. கந்தர் சஷ்டி கவசம் மெல்லிய ஒலியில் பக்தி மணம் பரப்பிக் கொண்டிருந்தது. விபூதி வாசனை முருகனின் பெருமையை எடுத்துச் சொன்னது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். வழக்குரைகளின் வாழ்வில் அவர்களை மற்றவர்கள் எளிதாக தவறாக புரிந்து கொண்டு விடுவதுண்டு. குறை கண்டுபிடிப்பதும், குறை சொல்வதும் வழக்குரைஞர்களின் வாழ்வோடு ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். அதே போல மற்றவர்களால் குறை சொல்லப்படுவதற்கும் ஆளாவோம். வழக்குரைஞர்கள் தங்கள் சட்டத் தொழிலையையும், வாழ்வையும் பிரித்து பார்க்கத் தெரியாதவர்களாக இருந்தால், இன்னும் சிக்கல்.

எனவே தோன்றிய   குறைகள் மறையவும், குறைகள் ஏதும் வராமலிருக்கவும்  மனமுருக 'முருகா ... முருகா..' என்று வேண்டி வணங்கினோம். ஆனால் எந்தக் குறையை எந்த சட்டப் பிரிவின் கீழ் மனு செய்வது என்று சட்டென தெரியவில்லை. எனவே லார்ட் முருகன் தனது உள்ளார்ந்த அதிகாரங்களை (Inherent Powers) செலுத்தி தக்க பரிகாரம் வழங்க உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 151 -இன் கீழ் மனு (Petition under section 151 CPC) செய்வதைப் போல பொதுவாக மனு செய்தோம்.

வரம்  தரும் தேவதைகள் தவறாக ஏதும் செயல்பட்டு துஷ்டத்தனம் செய்தால், அதை கண்காணித்து சீர் செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுபு 227 - இன் (Article 227) கீழ் மனு செய்வதைப் போல முன்னதாகவே ஒரு வணக்கம் வைத்தோம். எவ்வித எதேச்சதிகரத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஆர்டிகிள் 226 -இன் கீழும் சில கோரிக்கைகளை வைத்து பெரும் வரங்களை (Writs) பெற்றோம். ஆனால் ஆர்டிகிள் 32 உச்ச நீதிமன்றத்திற்கு உரியது (அதாவது லார்ட் முருகனின் அப்பா சிவபெருமான் கோவில்) என்பதால் இங்கு அதன்படி மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை. அவசர கால நிவாரணங்களுக்கு கூடவே ஒரு எமர்ஜன்ட் பெடிசனையும் (முருகனின் பெயரில் அர்ச்சனை) தாக்கல் செய்தோம். உரிய நீதிமன்ற கட்டணம் செலுத்தி விட்டோம் (அர்ச்சனை தட்டில் மற்றும் உண்டியலில் காசு). எல்லா பரிகாரங்களையும் பெற்று (Petition allowed... Decreed as prayed for with costs... ) மனநிறைவுடன் அலுவலகம் திரும்பினோம்.

குன்றின் மீது அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் கோவில்
(Lord Balamurugan Temple, Salem)

நெருக்கடி மிக்க சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை
(குன்றின் மீது இருந்து எடுத்த படம்)

பாலமுருகன் கோவில் அமைந்துள்ள குன்றுக்கு வரும் மலைப்பாதை

குன்றின் மீதிருந்து  பார்க்கும் போது குட்டியாக தெரியும் பெரிய கட்டடங்கள்

முருகனின் அருளும் வரமும் பெற்ற நிலையில் நானும் (இடது) நண்பர் வழக்குரைஞர்  திரு இரா.மோகனமுரளியும் (வலது)

என் வீட்டு குட்டி  பாலமுருகன் (என் மகன்)

Comments

M.Dharmaprabu said…
Nice to read.. Good comparative post with Lords and Law....
Thanks Mr. M.Dharmaprabhu..
எளிமையான சட்ட விளக்கங்கள்.
நன்றி.
பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் எது என்று கேட்டல், "சரியாக புரிந்து கொள்ளாமை" அல்லது "தவறாக புரிந்து கொள்ளல்" என்று சொல்லலாம். இது எப்படி என்று கேட்டல், நமது வாழ்வின் நிகழ்வுகளை, தொடர்புகளை, போக்குகளை "அரைகுறையாக புரிந்து கொள்ளல்" . எனவே எதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் முன் ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அது நிச்சயம் நம்மை பிரச்சனையில் கொண்டு சென்று விட்டு விடும். அதுவே நம்மை சார்ந்த, நம்மை நேசித்த, நம்மை நம்பிய, நமக்கு உதவிய மற்றொருவருக்கும் பிரச்சனையாக முடிந்து விடக் கூடும். சில சமயம் நாம் சரியாகப் புரிந்து கொண்டிருந்தும் நம்முடன் தொடர்பு கொண்டவர் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர் நமக்கு எதிராக தவறாக முடிவு எடுத்து விடும் அபாயமும் ஏற்பட்டு விடுவதுண்டு.

அதற்காகத்தான் சிந்தனை, ஆராய்ச்சி என்ற இரு கருவிகள் நமக்கு உற்ற துணையாக உள்ளன. அதன் முடிவு நல்ல முடிவாக அமைய ஆண்டவனின் அருளும் வேண்டும். அந்த அருளைப் பெற, கஷ்டம் வருவதற்கு முன்பாகவே அவருக்கு "சல்யுட்" அடித்து விடுவது நல்லது. அப்படி அடித்து பாருங்கள்.... ! வரவிருக்கும் கஷ்டம் கூட வழியிலேயே காணமல் போய் விடும்.

உண்மையான வரிகள் சார்..