மணிமொழி..... உன்னை மறப்பதெப்படி.....?


என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?

எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!

வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?

முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.

பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு. இங்கு
பிழை செய்தவள் நீதான்.

தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்
வா.. வா... கண்ணே !


இயன்றவரை பணிகின்றேன்....
நம்மிருவரின் எதிர்காலத்துக்காக அல்ல.
புரியும் சக்தி இருந்தால் 
புரிந்து கொள்... இல்லாவிட்டால்...

கண்ணே மணிமொழி.... 
கண்டிப்புடன் சொல்கின்றேன்..
என்னை மறந்து விடு.....
என்னுடையதையும் துறந்து விடு.....

Comments

மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

நினைவுகள் தொடர் கதை..!
அருமை ஐயா.. ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும்... தொடர வாழ்த்துக்கள்...
Unknown said…
கதையை
கவிதையாய்
கனிவாய்
மொழிந்தது...

அருமை
இனிமை
பெருமை!