பூமிக்கு வந்த சாமிகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

      

      தேடிக் கண்டுகொண்டேன் - திரு
      மாலொடு நான்முகனும் 
      தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
      தேடிக் கண்டுகொண்டேன்.
       - திருமுறைப் பாடல்

இத்திருமுறைப்பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து நிற்கிறது. 

உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களா ? கண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படி எல்லாம் நாங்கள் நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன் வந்தாலும் கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே.

கடவுளைக் காணமுடியுமா ? என்பது உலகத்தில் அன்று தொடக்கி இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெருவினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை "கடவுள் போல வந்தீர்கள்" என்று அழைப்பது நம் வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கை கொடுக்கும் செயலை கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட சமூகத்தில் கடவுள் வடிவிலேயே காணும் நிலையும் காணப்படுகிறது.   

தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம். கடவுளை நம்பாதவர் கூட தம்மை அறியாமலே "கடவுளே " என்று சொல்லுவதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள், பல உருவங்கள் கொடுக்கப்பட்டாலும் "கடவுள் ஒருவரே" என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திலேற்க வேண்டியதே ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட " கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்"   என்பதும் நோக்கத்தக்கதாகும். அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் கூட, "நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கு" என்று கூறுவதையும் நாம் அறிவோம்.


மனிதன் வாழுகின்ற இந்தப்பூமி இப்போது அவலத்தின் மடியில் அல்லற்பட்டு நிற்கிறது. "ஆர்வருவார் காப்பாற்ற?" என்று அவலக்குரல் எழுப்புகிறது. சாதரண வாழ்க்கை சீர்குலைந்து நிற்கிறது. சட்டமா ஒழுங்கா , சமயமா கோவிலா என்றெல்லாம் எண்ணி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. இனத்துக்காய் சண்டைமொழிக்காகச் சண்டை , மதத்துக்காய் சண்டை என்று சண்டை செய்த மனோபாவம் மங்கிப்போய் நிற்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் '

உணர்வுடன் கலக்க ஆரம்பிக்கின்றது.  சாதிகள் பறக்கின்றன; தத்துவங்கள் பறக்கின்றன; ஏதுவரும் எனவறியா ஏக்கமே மிகுகிறது. போதி மரப் புத்தரும் , சிலுவை தரும் கர்த்தரும்பிறை காட்டும் அல்லாவும், பரியேறும் பெருமாளும்பள்ளிகொள்ளும் திருமாலும் எல்லாமே சரியென்னும் நிலையிப்போ எழுகிறது.  

எல்லாக் கடவுளும் எல்லா மதங்களும் இணைகின்ற புரட்சியைத்தான் இப்போது காணுகிறோம். இந்தப் புரட்சிக்கு வித்திட்டு சமத்துவத்தை சமநிலையை சமதர்மத்தை உருவாக்கியது கொடுமையான கொரனோ என்னும் நோயாகும்.

இது ஏன் வந்தது ? யார் பரப்பியது ? இதில் அரசியல் உண்டா ? பொருளாதார நோக்குண்டா ? என்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் விதண்டாவாதங்களையும் வெளிப்படுத்துவதில் காலத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிகள் , முகநூல்கள் , கைபேசிகள் யாவும் சரியான வகையில் பயன்படாமல் போகும் நிலையும் காணப்படுகிறது. 

இப்படியான விடயங்களை எதற்காக இங்கு காட்டுகிறீர்கள் என்னும் வினா உங்கள் எல்லோர் உள்ளத்திலும் நிச்சயமாக எழாமல் இருக்கவே முடியாது ! அவசியம் கருதியே சொல்லும் நிலை ! அனைவரின் மனத்திலும் அமரவேண்டிய நிலை ! அதனாலேயே இத்தனை விளக்கங்கள் !  

கொரனோ வந்து கோரமாய் தாண்டவம் ஆடி பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கை குலுக்கவோ முடியாத நிலையை கொரனோ ஏற்படுத்தி விட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து !  குலவினால் ஆபத்து ! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் "நெருப்பாற்றின் குறுக்கே கயிர்ப்பாலம்" கட்டி நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது கொரனோ தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரனோவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்கிறது. அதனால் தற்போது மருத்துவர்கள் அந்த அபாய பாலத்தில்தான் நடக்கிறார்கள்.

வைத்தியர்களும் தாதியர்களும் வானத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். அவர்களுக்கும் எங்களை ஒத்தவர்களே. குடும்பம் அவர்களுக்கும் இருக்கிறது. அன்பான கணவன் ஆசையான குழந்தைஅன்பான மனைவி அணைத்திடக் குழந்தை , அப்பா , அம்மா , சகோதரங்கள் , என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே அவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். 

வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர - அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் களைப்பு இருக்கும்.

அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்ல. எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங்கோணாமல் சினங்காட்டாமல் பசியை, நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

இரத்தமும் ,சதையும் ,மரணமும் , ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட  ஓலமிட்டு நிற்பவரும், மரண வாயில் நிற்பவரும்தான் வந்துநிற்பார்கள். சொகுசான மகிழுந்து இருந்தும், சொர்க்கமாக வீடிருந்தும், பஞ்சுமெத்தைப் படுக்கை இருந்தும் அவர்களுக்கு நல்லதொரு நித்திரைதான் வந்திடுமா ? ஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?  

நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது . இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்தபின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரனோவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவமனையிலேயே இருக்கும் நிலை உருவாகிவிட்டது.  பணிகூட இப்போது பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொட முடியாமல் எட்ட நிற்கும் நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டிலிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்க தாயில்லை. பார்க்கத்துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை. 

மூன்று பிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரிய விருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வர முடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கை பேசியில் கதைக்கிறார்கள். காணொளியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய் காணாமலே போய்விடுகிறாள். கட்டிய கணவன் கதறி அழுகிறான். மருத்துவ மாது மனிதம் காக்க தெய்வமாகிறாள் ! 

இங்கிலாந்தில் இருய அறுவைச் சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சகமருத்துவர்களால் பெருதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவிக் கொள்ளுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும் புலமை பெற்றார். மருத்துவத்துக்கே தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார். 

வீடு சென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும்பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமாமனைவியுடன் குழந்தையுடன் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே !

வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர் திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையை காணொளி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவ மாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது.அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வர முடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன் ! இதுதான் மருத்துவர்களின் நிலை ! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கி விடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவா ?  விருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை ! பற்றற்ற நிலை !  

தன் கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தை கண்டதும் தற்கொலை முயற்சிக்கே பல தாதியர்கள் சென்று விடுகிறார்கள். பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள் ? மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொரு விதம். " மக்கள் சேவை மகேசன் சேவை" இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம். "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதை மகான்களே மொழிந்திருக்கிறார்கள். மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று "கண்கண்ட தெய்வம் " ஆகின்றார். விதண்டாவாதம் பேசுவதும், விடமத்தனமாய் கருத்துக்களைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும்நாட்டுநிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையில்லா நிலையையே காட்டும். 


வீட்டுக்கே வர முடியாமல் நாட்டினைக் காத்திட தம் வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். "மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே" இவர்கள் என்பதை யாவரும் மனமிருத்தல் அவசியமாகும்.   

 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு 

இலங்கை பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். 

கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மாற்றம், உதயன், ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்து சாதனம், மெல்லினம், உதயம், பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார். 

10க்கு மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.

ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.

2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.

தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். 


பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம்.  வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

Comments